பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராஜ்யசபாவில் எதிர்ப்பு : திரிணமுல், இடதுசாரி எம்.பி.,க்கள் வெளிநடப்பு

பெட்ரோல் விலை உயர்வு, ராஜ்யசபாவில் நேற்று எதிரொலித்தது. மத்திய அரசு மீது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர். சபையில் விவாதம் நடத்த, அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, திரிணமுல் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்து விட்டதாக கூறி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2.35 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 50 காசுகளும், இரண்டு நாட்களுக்கு முன், உயர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, சமையல் "காஸ்' மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளையும், கணிசமாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்னை, ராஜ்யசபாவில், நேற்று எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் உறுப்பினர், பிரசாந்தா சட்டர்ஜி, பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, ஆறு முறை, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள், பெரும் அவதி அடைந்துள்ளனர். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு, தவறு செய்து விட்டு, அதன் சுமையை, மக்கள் மீது சுமத்துகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
பா.ஜ., உறுப்பினர், வெங்கய்யா நாயுடு,""பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும்போது, பார்லி.,க்கு வெளியில், விலை உயர்வை அறிவித்தது, தவறானது. இது, மக்கள் விரோத நடவடிக்கை. பெட்ரோல் பங்குகளை இரவு நேரத்தில் மூடுவதற்கு உத்தரவிட்டது குறித்து, விவாதம் நடத்த வேண்டும்,''என்றார்.

திரிணமுல் காங்., உறுப்பினர், டெரக் ஓ பிரெயன் பேசுகையில்,""பெட்ரோல் விலையை உயர்த்தியதன் மூலம், நாட்டு மக்கள் மீது, காங்கிரஸ் கட்சி, போர் தொடுத்துள்ளது. பெட்ரோல் பங்குகளை, இரவு நேரத்தில் அடைக்க வேண்டும் என, அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுவதும், மோசமான கருத்து,''என்றார்.
இந்த பிரச்னையால், கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து, 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும், சபை கூடியதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர், சீதாராம் யெச்சூரி, மறுபடியும், இந்த பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில்,""பெட்ரோல் விலை உயர்வை, வாபஸ் வாங்க வேண்டும். இது தொடர்பாக, சபையில், இப்போதே விவாதம் நடத்த வேண்டும்,'' என்றார்.
ராஜ்யசபா துணை தலைவர், குரியன், இதை ஏற்க மறுத்ததை அடுத்து, இடதுசாரி கட்சி உறுப்பினர்களும், திரிணமுல் காங்., உறுப்பினர்களும், சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நிலக்கரி ஊழல் : பா.ஜ., பாய்ச்சல் : நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்த பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, பா.ஜ., எம்.பி., பிரகாஷ் ஜாவேடகர் எழுப்பினார். அவர் பேசியதாவது: நிலக்கரி ஊழல் என்பது, பிரமாண்டமான ஊழல். அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டபோது,"நான் என்ன, ஆவணங்களை காக்கும் வேலையையா செய்கிறேன்' என, பிரதமர், எரிந்து விழுகிறார். ஆவணங்களை மட்டுமல்ல; நாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு வேலைகளையுமே, அவர், ஒழுங்காக செய்யவில்லை. இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, பிரகாஷ் ஜாவேடகர் பேசினார். இதற்கு, காங்., உறுப்பினர்கள், எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது