நீர்மின் நிலையத்துக்காக காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட திட்டமிட்டுள்ள விவகாரத்தை உங்கள் கவனத்துக்கு அவசரமாக கொண்டு வருகிறேன்.
கர்நாடக சட்ட மந்திரி இதுதொடர்பாக கூறியுள்ள தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. அதில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் நீர்மின் சக்தி திட்டத்துக்காக அணைகட்டபோவதாக கூறியுள்ளார். அங்கு 3 இடங்களில் அணை கட்ட போவதாகவும், மேலும் ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் உபரி தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்துவதற்காக ரூ. 500–ல் இருந்து ரூ.600 கோடி செலவில் திட்டங்களை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். காவிரி நடுவர்மன்றம் காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக வரையறை செய்துள்ள நிலையில் அவர்கள் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.
கர்நாடகாவின் இந்த செயல் முற்றிலும் சட்ட விரோதமானது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். மேலும், காவிரியின் இயற்கை நீரோட்டத்தை தடுப்பதுடன் தமிழ்நாட்டின் பாசன வசதியை கடுமையாக பாதிக்கும் செயலையும் செய்துள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக காவிரி நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கு எதிராக இவை அனைத்தும் அமைந்துள்ளன. எனவே, கர்நாடக அரசு இந்த திட்டங்களை கீழ்பாசன மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்த அனுமதிக்க கூடாது. காவிரி நடுவர் மன்றம் அளித்த உத்தரவுபடி காவிரி மேலாண்மை குழு இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே காவிரி நீர் பயன்பாட்டை முறையாக கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. இந்த நேரத்தில் கர்நாடக அணை கட்ட திட்டமிடுவது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதோடு மட்டுமல்லாது கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிராக அமைந்திருக்கிறது.
மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை பொறுத்தவரையில் கீழ்பாசன மாநிலங்கள் அனுமதி இல்லாமல் மேல்பாசன பகுதி மாநிலங்கள் எந்த கட்டுமானங்களையும் செய்யக்கூடாது என்பது கூட்டாட்சி முறையாகும். ஆனால் அதை கர்நாடகா மீறுகிறது.
மேலும் மேகதாது மின் உற்பத்தி திட்டம், சிவசமுத்திரம் அணை திட்டம், ஒகேனக்கல், ரசிமனால் நீர்மின் திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இந்த திட்டங்களை தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் அல்லது மத்திய அரசின் மின்உற்பத்தி அமைப்பு ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தலாம் எனவும் கூறியிருந்தோம். இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கும்போது அவர்கள் தன்னிச்சையாக அணை திட்டங்களை உருவாக்குவது கோர்ட்டுக்கு எதிரானதாகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நடுவர் மன்ற மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டும் என்று மத்திய நீர்வள துறைக்கு உத்தரவிடுமாறு உங்களை நான் பலமுறை வற்புறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை அது அமைக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் நீங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கர்நாடகாவுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். காவிரி படுகையில் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மின்உற்பத்தி திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் உருவாக்க கூடாது என்று கூற வேண்டும். மேலும் காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்படும் வரை இந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிர்வாகத்திற்கு நீங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடி தலையிட்டு சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.